மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற தாய்!!

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை கடந்த ஏப்பிரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தாய் ஒருவர் பிரசவித்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக புதன்கிழமை (22) மட்டு போதனாவைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி கலாறஞ்ஜினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

மட்டு போதனாவைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சோந்த 25 வயதுடைய ஹரிகரன் கிருஸ்ணவேணி வெளிநாட்டில் இருக்கும் போதே கருத்தரித்துள்ள இவர் 8 வாரங்களில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவுடன் இவர் மட்டு போதனாவைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் கிளினிக்கிற்காக வந்த இவரை கதிர்வீச்சு மூலம் சோதனை செய்தபோது இவர் 4 குழந்தைகள் கருத்தரித்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த தாய் ஏற்கனவே சிசேரியன் மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ள நிலையில் குறித்த குழந்தை இறந்துள்ள நிலையில், ஐந்து வருடங்களின் பின்னர் மீண்டும் இயற்கையாகவே கருத்தரித்துள்ளார். பின்னர் அவரை மிக நெருக்கமான கண்காணிப்பில் வைத்தியர்கள் வைத்திருந்து பராமரிப்பு செய்துள்ளனர்.

இந்த நிலையில் 32 வாரமும் 5 நாட்களும் ஆன நிலையில் கடந்த ஏப்பிரல் மாதம் 4ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏப்பிரல் 5ம் திகதி 4 குழந்தைகளை அறுவை சிகிட்சை மூலம் ஒரு ஆண் குழந்தையினையும் 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

மகப்பேற்று வைத்திய நிபுணர் எம்.சரவணன், தலைமையிலான வைத்திய குழாத்தினர் குறித்த பிரசவத்தினை மேற்கொள்ள சிறப்பான முறையில் செயற்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *