“எலிமினேட்டரில் RCBயை மேக்ஸ்வெல் வெற்றிபெற வைப்பார்” – வாசிம் அக்ரம் கணிப்பு!

2023 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 200 ரன்களை யாரும் மறந்திருக்க முடியாது.

எலிமினேட்டர் சுற்றில், ஆர்சிபி அணியை கிளென் மேக்ஸ்வெல் வெற்றிபெற வைப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

சென்னை அணிக்கு எதிராக கடந்த 18ஆம் தேதி நடந்த நாக் அவுட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்தது. முன்னதாக மழையால் ஆட்டம் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டிருந்தது. அத்துடன் சென்னை அணி அதிக நெட் ரன் ரேட்டை வைத்திருந்ததால், அந்த அணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்பட்டன.

மேலும் மழை பெய்யக்கூடிய சூழலில், சென்னை அணி டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை முதலில் தேர்வு செய்திருந்தது. இத்தகைய சாதகமான அம்சங்களுக்கு பின்னரும், சென்னை அணியாள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல தேவையான 201 ரன்களை எடுக்க முடியவில்லை. இந்நிலையில் ஆர்.சி.பி அணி எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த மேட்சில் ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் அணியை வெற்றி பெற வைப்பார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளர் வாசிம் அக்ரம் கணித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது-

தற்போதைய சூழலில் மேக்ஸ்வெல் நல்ல ஃபார்மில் இல்லை என்பது அவருக்கும் தெரியும். இருப்பினும் எலிமினேட்டர் சுற்றில் அவர் பெங்களூரு அணிக்கு வெற்றியை பெற்று தருவார் என்று நம்புகிறேன். 2023 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 200 ரன்களை யாரும் மறந்திருக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *