மியான்மாருடன் பொருளாதார மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்த பிரதமர் அழைப்பு…

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

(2024.05.16) மியான்மரின் பதில் தூதுவர் திருமதி லீ யி வின் அவர்களை அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், தேயிலை மற்றும் தென்னை வர்த்தகம், கனிமங்கள், பௌத்த சுற்றுலா போன்றவற்றுக்கு விசேட கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுலா போன்ற பல துறைகளில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

முன் பதப்படுத்தப்பட்டதென்னை உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கையின் அதிக தேவையை பூர்த்தி செய்ய இலங்கையின் தென்னை உற்பத்தி போதுமானதாக இல்லாத காரணத்தினால், மியன்மார் இலங்கைக்கு தேங்காய்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் தேயிலைக்கு பதிலாக தென்னையை பண்டமாற்று செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

2600 ஆண்டுகளுக்குப் பின்னரும் புத்தரின் தத்துவம் இன்னும் பிரசித்தி பெற்று விளங்குவதாகவும், அது இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான நெருங்கிய மத மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த உதவியது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

குறிப்பாக தேரவாத பௌத்தத்தின் பாதுகாப்பிற்கு மியன்மாரிடமிருந்து கிடைத்த ஆதரவை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த நாட்டில் உபசம்பதாவை நிறுவுவதற்கு மியன்மார் வழங்கிய ஆதரவின் மூலம் கடந்த காலத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே சமய ரீதியான நல்லுறவு இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

மியன்மாரின் யாங்கூனில் நடைபெறவுள்ள வர்த்தக கண்காட்சியில், இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை பங்கேற்க முடியும் என பதில் தூதுவர் லீ யி வின் தெரிவித்தார்.

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு இந்த வருடம் 75 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் அவர் கூறினார். மியான்மார் 11 ஆம் நூற்றாண்டில் பதான் ராஜவம்சத்தின் போது தேரவாத பௌத்தம் நிறுவப்பட்ட 1000 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மியன்மார் தூதரகத்தின் ஆலோசகர் தெப் சா தோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *