சூர்ய குமார் யாதவ் அதிரடி சதம்!! ஐதராபாத்தை எளிதாக வென்றது மும்பை அணி..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி எளிதாக ஐதராபாத்தை வென்றது. மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஆரம்ப ஓவர்களில் மும்பை அணி வீரர்கள் கேட்ச்களை மிஸ் செய்தது அந்த அணி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அபிஷேக் சர்மா 11 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த மயங்க் அகர்வால் 5 ரன்னும், நிதிஷ் ரெட்டி 20 ரன்னும் எடுத்தனர். டிராவிஸ் ஹெட் 48 ரன்களில் வெளியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெய்ன்ரிச் கிளாசன் 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய கேப்டன் கம்மின்ஸ் 17 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் சேர்த்தார்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 173 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி வீரர்கள் விளையாடினர்.

தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் 9 ரன்னிலும், ரோஹித் சர்மா 4 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த நமன் திர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 4.1 ஓவர்கள் முடிவில் 31 ரன்களில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து இணைந்த சூர்ய குமார் – திலக் வர்மா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. திலக் வர்மா ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாட, சூர்யகுமார் யாதவ் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி ரன்ரேட்டை எகிற வைத்தார்.

இந்த இணையை பிரிக்க ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் மேற்கொண்ட வியூகங்கள் பலன் அளிக்கவில்லை. 51 பந்துகளை எதிர்கொண்ட சூர்ய குமார் யாதவ், 6 சிக்சர் 12 பவுண்டரியுடன் 102 ரன்களும், திலக் வர்மா 37 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *