10 சிக்சர்களுடன் சதம் அடித்த வில் ஜேக்ஸ்… குஜராத் டைட்டன்ஸை பந்தாடியது RCB…

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபியின் பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் சதம் அடித்து அசத்தினார். 201 ரன்கள் இலக்கை 16 ஓவர்களிலேயே எடுத்து மிரட்டலான வெற்றி பெற்றது ஆர்சிபி.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் களத்தில் இறங்கினர்.

கில் வழக்கம் போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். சாஹா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 3 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் – ஷாரூக்கான் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஷாரூக்கான் 5 சிக்சர்களுடன் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரன்களை குவித்த சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். மில்லர் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 200 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பெங்களூரு அணி பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். கேப்டன் டூப்ளசிஸ் 12 பந்துகளில் 3 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து கோலியுடன் இணைந்த வில் ஜேக்ஸ் அதிரடியாக ரன்களை சேர்த்தார். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சிக்சர் பவுண்டரிகளை விளாசியதால் ஸ்கோர் எகிறத் தொடங்கியது.

41 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஜேக்ஸ் 10 சிக்சருடன் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். ஆர்சிபி வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டபோது, 94 ரன்கள் எடுத்திருந்த வில் ஜேக்ஸ், ராஷித் கான் வீசிய 16 ஆவது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பி சதம் அடித்தார்.

இந்த தோல்வி மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக் கனவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *