யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணம் செம்மணி வளைவு (Jaffna) பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறை சார் அதிகாரிகளும்  (12)  குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். 

 மேலும் யாழ் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது. 

இந்நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதன் சாதக, பாதகங்கள் தொடர்பாகவும் ஆராய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் செம்மணி பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலான திட்டவரைபை தனக்கு வழங்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *