நெல் கொள்வனவுக்காக 50 கோடி ரூபாய் வழங்கப்படும்…!

நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 50 கோடி ரூபா நிதியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (13) தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதற்கென இன்று (15) முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது தலா இரண்டு நெல் களஞ்சியசாலைகள் வீதம் நெற் கொள்வனவிற்காகத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்முறைப் பெரும் போகத்தில் நெற் கொள்வனவிற்காக இரண்டு பில்லியன் ரூபா நிதி கோரி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தாலும், நிதி அமைச்சின் அதிகாரிகள் அது தொடர்பாக எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை. அதனால் விவசாய பொறுப்பு நிதியத்திலிருந்து 250 மில்லியன் ரூபா நிதியைப் பெற்று, அதனூடாக நெற் கொள்வனவை, நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக ஆரம்பிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதி அமைச்சின் அதிகாரிகள் நெற் கொள்வனவிற்கு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், நேற்று ஜனாதிபதி இது குறித்து சம்பந்தப்பட்டதாகவும், அதற்கிணங்க 50 கோடி ரூபா நிதி அதற்காக வழங்குவதற்கு தீர்மானித்ததாக தெளிவுபடுத்தினார்.

மேலும் ஜனாதிபதியுடன் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்வதற்கான அவசியத்தை தெளிவுபடுத்தியதாகவும் , தமது கோரிக்கையை அவதானமாக செவிமடுத்த ஜனாதிபதி இந்நிதி ஒதுக்கீட்டை உடன் வழங்குவதற்குத் தீர்மானித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுக்க பிரதேசத்தை இளைஞர் விவசாய முயற்சியாண்மைக் கிராமமாக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வின் போதே நேற்று (14) அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாதுக்க பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, கமநல அபிவிருத்தித் திணைக்கள த்தின் ஆணையாளர் நாயகம் எம்.எச்.எல். அபேரத்ன உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *