தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு துறைமுக நகரம் மாறும் !

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையத்தின் நிர்மாணப்பணிகளை (2024.03.12) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

அண்மைக் காலத்தில் இலங்கையில் மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த அபிவிருத்தித் திட்டத்தின் வருகையை குறிக்கும் மிக முக்கியமான நிகழ்வு இதுவெனவும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வரலாற்று மையமாக இலங்கை விளங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர், எமது நாட்டின் மிகப்பெரும் நன்மை அதன் மூலோபாய அமைவிடமாகும் எனக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

“கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக நிலப்பரப்பை மீள்வரையறை செய்வதை நோக்கமாகக் கொண்ட பல பில்லியன் டொலர் பெறுமதிவாய்ந்த தொலைநோக்கு திட்டமாகும். இலங்கையின் தலைநகரான கொழும்பின் மையப்பகுதியை ஒட்டியதாக உருவாக்கப்பட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரம், உலகப்பொதுமையான வாழ்க்கை முறை, உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு மற்றும் பேண்தகு வாழ்வியலை வழங்கும்.

“வர்த்தகத் துறைகளுக்கு புத்தாக்கங்களை உருவாக்குவதற்கான சிறந்த சூழலையும் நாங்கள் வழங்குகிறோம். இலங்கை பிராந்தியத்தில் ஒரு முக்கிய பொருளாதார மையமாக மாற உள்ளது, கொழும்பு துறைமுக நகரம் நிச்சயமாக அந்த செயன்முறையை துரிதப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். “தெற்காசியாவுக்கான நுழைவாயில்” மற்றும் கிழக்கு மற்றும் மேற்குக்கான மத்திய மையமாக அதன் எதிர்பார்ப்புகளை மேலும் உறுதிப்படுத்தி, நாம் நடைமுறைப்படுத்தும் சீர்திருத்தங்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி கொழும்பு துறைமுக நகரம் பிராந்தியத்தில் வர்த்தகத்திற்கு மிகவும் வசதியான இடமாக மாறும். “

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சீனத் தூதுவர் கி சென்ஹொன்ங், துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, துறைமுக நகர அதிகாரிகள் மற்றும் Czech Port City Pvt Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் சியொங் ஹொன்ங்பென்ங் (Xiong Hongfeng) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *