மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்.. வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

மாமன்னன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கிறார் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும், அந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இதற்கான பணிகள் மாமன்னன் படத்திற்கு முன்பே தொடங்கின. ஆனால் உதயநிதி தன்னுடைய திரைப்படத்தை இயக்க வேண்டுகோள் வைத்ததன் காரணமாக மாமன்னன் திரைப்படத்தை இயக்க மாரி செல்வராஜ் ஒப்புக்கொண்டார்.

அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது துருவ் விக்ரம் படத்தின் வேலையை மாரி செல்வராஜ் தொடங்கி இருக்கிறார். மேலும் அந்தப் படம் குறித்து செய்திகள் வெளியான நிலையிலும், படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் இணையும் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அந்தப் படத்தை பா.ரஞ்சித் மற்றும் போர் தொழில் படத்தை தயாரித்த அப்ளாஸ் நிறுவன இணைந்து தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படம் கபடி போட்டியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. துப்பாக்கி போன்ற வலிமையான ஆயுதமாக விளையாட்டை பார்க்கும் துணிச்சல் மிக்க, தைரியமான இளைஞன் பற்றிய கதை என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பிரேமம் படத்தில் நடித்த அனுபாமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *