சுவிட்சர்லாந்துத் தூதுவர் மஹிந்த யப்பா அபேவர்தனவை சந்தித்தார்..!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் கௌரவ மஹிந்த யப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் திருமதி கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றப் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

இதன்போது பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) அவர்களுக்கு சபாநாயகர் விளக்கமளித்தார்.

இலங்கையிலுள்ள நல்லிணக்கம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, தற்பொழுது இலங்கையில் சிறந்தவொரு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், அதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதற்காக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவும் பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இடம்பெறவிருக்கும் தேர்தல் தொடர்பிலும் இதன்போது கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) அவர்கள் சபாநாயகரிடம் கேட்டறிந்தார். அதற்கமைய, ஜனாதிபதித் தேர்தல் சட்டரீதியாக நிர்ணயிக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் என்றும், அடுத்த வருடம் உரிய காலப்பகுதியில் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் மோசமான பொருளாதார நிலையில் இருந்த இலங்கைக்கு அதிலிருந்து மீள்வதற்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், எதிர்காலத்திலும் அவ்வாறான உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து இலங்கை சிறந்த பாதையில் பயணிப்பதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி சிரி வோல்ட், அதன்மூலம் பொருளாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இலங்கை வளர்ச்சியும் அபிவிருத்தியும் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கமைய எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகரிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *