சுகாதார அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம்

சுகாதார அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் – கிழக்கு மாகாண மட்டத்தில் சுகாதார துறை சார்ந்து நிலம் மற்றும்  பல பிரச்சனைகளுக்கு தீர்வு..

“முழுமையான சிகிச்சை முறை” எனும் தலைப்பில் கிழக்கு மாகாண மட்டத்தில் சுகாதார துறைசார்ந்து நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்  (16) மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரன தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடல்  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டீ. ஜி.எம். கொஸ்தா வின்  ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், இரா.சாணக்கியன், அமைச்சுக்களின் செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன், கிழக்கு மாகாணத்தின் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், திணைக்களம் சார் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு பிராந்திய சுகாதார பணிமனைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் சுகாதாரத்துறை சார் பிரச்சினைகள்   தொடர்பாக இதன் போது அமைச்சருக்கு சுகாதார துறை சார் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் காணப்படும் பல சுகாதார துறை சார் குறைபாடுகளை மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன்,  எஸ்.வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், பைசல் காசிம் ஆகியோரினால் அமைச்சருக்குத்   தெளிவுபடுத்தப்பட்டது.

அத்தோடு மாவட்டத்தில்  காணப்படும்    பிரச்சினைளாக     ஒசுசல, அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆளணி, வாகன வசதி என்பவற்றில் காணப்படும் பற்றாக்குறை, பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை மேம்படுத்துவதன் அவசியம் மற்றும் பழமை வாய்ந்த வாழைச்சேனை வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அவற்றிற்கான தீர்வுகளை தாம் மிக விரைவில் பெற்றுத் தருவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநரினால் நிவர்த்திக்க முடியுமான சில விடயங்களை அவர் முடித்துத் தருவார் என தெரிவித்ததுடன், பாரிய செலவில் முன்னெடுக்கப்பட வேண்டிய குறைபாடுகளை அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில்  நிவர்த்திப்பதாகவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *