கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கலாநிதி கோபாலரத்தினம் நியமனம்!

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி காணி அபிவிருத்தி திறன் விருத்தி மகளிர் அபிவிருத்தி நீர் விநியோக துறை அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரி கலாநிதி மூ.கோபாலரத்தினம்(மூகோ) நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியான இவர், கிழக்கு மாகாண சபையின் பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் பேரவைச் செயலாளராக கடமை புரிந்துவந்தார். அதற்கு முன்னர் திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றியிருந்தார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர், மூத்ததம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வராவார். தற்போது கல்முனையில் வாழ்ந்து வருகிறார்.

1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்ட இவர், தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். கலைமாணி பட்டத்தினை பேராதனை பல்கலைக் கழகத்திலும், பொதுநிருவாக துறையில் முதுமானிப் பட்டத்தினை இந்தியா பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.

இவர், தம்பலகாமம், ஏறாவூர் நகர் ,பட்டிப்பளை, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், குச்சவெளி, நாவிதன்வெளி,திருக்கோயில் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *