டபுள் சூப்பர் ஓவர்.. இந்திய அணி த்ரில் வெற்றி

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 2வது சூப்பர் ஓவர் மூலமாக இந்திய அணி த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளில் 121 ரன்களையும், ரிங்கு சிங் 39 பந்துகளில் 69 ரன்களையும் சேர்த்தனர்.

lஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் 213 ரன்கள் என்ற கடின இலக்குடன் குர்பாஸ் – ஜத்ரான் கூட்டணி களமிறங்கியது. ஆவேஷ் கான் வீசிய 2வது ஓவரிலேயே குர்பாஸ் சிக்சர் அடிக்க, அடுத்தடுத்து ஒவ்வொரு ஓவருக்கும் சிக்ஸ் மற்றும் பவுண்டரி விளாசப்பட்டது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவிலேயே ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் இருவரின் ஓவர்களிலும் நிதானமாக ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் 10வது ஓவரை வீசிய சிவம் துபே பந்துவீச்சில், மொத்தமாக 18 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களை குவித்தது.

இதனால் இந்திய அணி பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முட்டி மோதினர். சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் குர்பாஸ் 29 பந்துகளில் அரைசதம் அடிக்க, அடுத்த 3 பந்துகளில் வாஷிங்டன் சுந்தரின் அபாரமாக கேட்ச் காரணமாக 50 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஜத்ரான் 40 பந்துகளில் அரைசதம் அடிக்க, வாஷிங்டன் சுந்தர் பந்தில் சஞ்சு சாம்சனின் அபார ஸ்டம்பிங்கால் 50 ரன்களுடன் வெளியேறினார். தொடர்ந்து அடுத்த பந்திலேயே ஒமர்சாய் டக் அவுட்டாகி வெளியேற, ஆட்டத்தில் இந்தியாவின் கைகள் ஓங்கியது.

ஆனாலும் குல்புதீன் – முகமது நபி இருவரும் ஆஃப்கானிஸ்தான் அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தனர். ஆவேஷ் கான் வீசிய 14வது ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்ட நிலையில், குல்தீப் யாதவ் 15வது ஓவரில் 17 ரன்களும், ரவி பிஷ்னாய் வீசிய 16வது ஓவரில் 17 ரன்களும் சேர்க்கப்பட்டது.

இதையடுத்து முகமது நபி 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கரீம் ஜனத் 2 ரன்கள் எடுத்து வெளியேறினர். இதனால் கடைசி 2 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவையாக இருந்தது. ஆவேஷ் கான் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் உட்பட 17 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த ஓவரை வீச முகேஷ் குமார் அழைக்கப்பட்டார். அதேபோல் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் குல்புதீன் நைப் பந்தை எதிர்கொண்டார். முதல் பந்திலேயே ஒய்டாக வீச, மீண்டும் வீசப்பட்ட பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது.

இதையடுத்து 4வது பந்தில் சிக்ஸ் அடிக்கப்பட, கடைசி 2 பந்தில் 5 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அதில் 5வது பந்தில் 2 ரன்கள் சேர்க்க, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற போது, 2 ரன்கள் சேர்க்கப்பட்டு ஆட்டம் டை ஆனது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய அணி தரப்பில் சூப்பர் ஓவரை வீச முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்புதீன் – குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். அதில் முதல் பந்திலேயே விராட் கோலியின் சிறந்த ஃபீல்டிங்கால் குல்புதீன் ரன் அவுட்டாகி வெளியேற, பின்னர் குர்பாஸ் – நபி இணைந்தனர். அதன்பின் 1, 4, 1, 6 ஆகிய ரன்கள் அடிக்கப்பட, கடைசி பந்தில் சஞ்சு சாம்சன் வீசிய த்ரோ, நபி கால்களில் பட்டு வேறு திசைக்கு சென்றது. இதனால் 3 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஒமர்சாய் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 3 மற்றும் 4 ஆகிய பந்துகளில் ரோகித் சர்மா அபார சிக்சர்களை விளாசினார். பின்னர் 5வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, கடைசி பந்தில் இந்திய வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது ரோகித் சர்மாவால் 2 ரன்கள் ஓட முடியாது என்பதை அறிந்து, ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறினார். அப்போது ரிங்கு சிங் களமிறங்க, கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் டை-ஆனது. இதனால் மீண்டும் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. இம்முறை இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இணை களமிறங்கியது. முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த ரோகித் சர்மா, 2வது பந்தில் பவுண்டரி விளாசினார். 3வது பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில், 4வது பந்தில் ரிங்கு சிங் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்த பந்திலேயே ரோகித் சர்மா ரன் அவுட்டானார்.

இதனால் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி – குர்பாஸ் கூட்டணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் பவுலிங் செய்ய கடைசி நிமிடத்தில் அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே நபி ஆட்டமிழக்க, தொடர்ந்து 2வது பந்தில் ஒரு ரன்னும், 3வது பந்தில் சிக்சர் அடிக்க முயன்று குர்பாஸ் டக் அவுட்டாகினர். இதன் மூலம் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *