கேப்டவுனில் முதல் வெற்றி…இந்தியா அபாரம்!

31 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இதுவரை கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 4 தோல்வி, 2 டிரா என்று ஒருமுறை கூட வெற்றிபெற்றதில்லை. இதனால் வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வியுடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது.

CAPE TOWN, SOUTH AFRICA – JANUARY 04: Rohit Sharma (Captain) of India during day 2 of the 2nd Test match between South Africa and India at Newlands Cricket Ground on January 04, 2024 in Cape Town, South Africa. (Photo by Grant Pitcher/Gallo Images)

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது.

11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் மீண்டும் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்த நிலையில் இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா அணியின் மார்க்ரம் – பெடிங்ஹாம் தொடங்கினர். இதில் பெடிங்ஹாம் 11 ரன்களிலும், வெரைன் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆட்டத்தை மார்க்ரம் கையில் எடுத்து கொண்டார். அதிரடியாக ஆடிய அவர், எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிவதை கண்டுகொள்ளாமல் வெளுத்து கட்டினார். சிறப்பாக ஆடி 99 ரன்களில் சதம் விளாசிய அவர், 106 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 79 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் – ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் அடிக்கப்பட, பர்கர் வீசிய 2வது ஓவரில் 15 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றியை பெற முனைப்புடன் இருப்பது தெரிய வந்தது.

அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகள் உட்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து கில் – ரோகித் சர்மா கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. 8 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை கடக்க, ரபாடா வீசிய பந்தில் சுப்மன் கில் 10 ரன்கள் எடுத்திருந்த போது போல்டாகி வெளியேறினார். பின்னர் விராட் கோலியும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் – ரோகித் சர்மா இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

31 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி கேப்டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *