வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி… 262 ரன்களை சேஸிங் செய்து புதிய சாதனை…

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 262 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

சால்ட் 6 சிக்சர் 6 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். சுனில் நரைன் 4 சிக்சர் 9 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இருவரும் முதல் விக்கெட்டிற்கு 10.2 ஓவர்களில் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்தவர்களில் வெங்கடேஷ் ஐயர் 39 ரன்னும், ரஸல் 24 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 261 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி வீரர்கள் களம் இறங்கினர். அந்த அணிக்கு பிரப் சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டா இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. பிரப் சிம்ரன் 20 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார்.

ரிலே ரூசே 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தாடர்ந்து இணைந்த பேர்ஸ்டா – ஷஷாங்க் சிங் இணை கொல்கத்தா பவுலிங்கை வெளுத்தெடுத்து ரன்களை குவித்தது.

18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் அணி 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேர்ஸ்டா 48 பந்துகளில் 9 சிக்சர் 8 பவுண்டரியுடன் 108 ரன்களும், ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 8 சிக்சர் 2 பவுண்டரியுடன் 68 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அணி வெற்றிகரமாக சேஸிங் செய்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *