வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள மக்கள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

 இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது என பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க, பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 பொலிஸாருடன் இணைந்து கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக இரவு ஆரம்பித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.