பழுதடைந்த தயிர் விற்பனை: விற்பனையாளருக்கு அபராதம் !

பழுதடைந்த தயிரை விற்பனைக்காக வைத்திருந்தமை மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை போன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரை அண்டிய பகுதியொன்றில் பால் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையமொன்றை நடத்திவந்த ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதார பரிசோதகரினால் இப்பால் உற்பத்தி விற்பனை நிலையம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, பழுதடைந்த ஒரு தொகை தயிர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

விற்பனை நிலையத்தில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தமையும் இதன்போது கண்டறியப்பட்டது.

இவை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரினால் யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது விற்பனையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவரை கடுமையாக எச்சரித்து 30,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

அத்துடன் விற்பனை நிலையத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் விற்பனை நிலையத்தை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.