போரதீவுப்பற்றில் சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும்!!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும் வன்னிஹோப் அணுசரனையில் “அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பழுகாமம் துரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக வன்னி ஹோப் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரமும் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு அதிதிகள் கெளரவம் வழங்கியதுடன் மகளீர் தின சிறப்பு பேச்சு, வினோத உடைப்போட்டி, நடனம் என பல போட்டி நிகழ்வுகளும் இடம் பெற்றது. இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாவட்டத்தில் சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களை வலுப்படுத்தி அவர்களது உற்பத்தியினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக அந்திய செலவாணியை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இந் நிகழ்வில் போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.பகிதரன், உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.சசிகரன், வன்னி ஹோப் வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.பாஸ்கரன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததுடன் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *