மன்னாரில் 5,000 பேருக்கு காணி உறுதிகள்

• உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளது – ஜனாதிபதி.

உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொவிட் தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி “உறுமய” திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“கடந்த முறை வடக்கிற்கு வந்தபோது மன்னாருக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. மாத இறுத்திக்குள் வருவதாக சொன்னேன். இன்று வந்துவிட்டேன். செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அபிவிருத்தி தொடர்பில் கூறிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வோம்.

இங்கு வவுனியா – மன்னார் மக்கள் வந்துள்ளனர். இங்கிருந்து செல்லும்போது காணி உரிமையுடன் செல்வீர்கள். வரும்போது உரிமை இருக்கவில்லை. செல்லும் போது உரிமை இருக்கும். இந்த காணிகளை இனி உங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம். வடக்கில் 90 ஆயிரம் உறுதிகள் வழங்க வேண்டியுள்ளது. அவற்றில் 40 ஆயிரம் உறுதிகள் எந்த பிரச்சினைகளும் இல்லாதவையாகும்.

கிராமங்களுக்கே சென்று அதற்குரிய பணிகளை செய்யுமாறு ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். 1935 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரையில் காணி அனுமதி பத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அவற்றை எந்த நேரத்திலும் இரத்துச் செய்ய முடியும் என்பதால், காணி உறுதி குறித்து மக்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. காணியை சுத்தம் செய்து அதற்குள் விளைச்சல் செய்து அபிவிருத்தி செய்த பின்பும் அதற்கான உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை.

சிலர் 85 வருடங்களாக இந்நிலையில் இருந்தனர். 20 இலட்சம் பேர் இப்படியாக உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அதனை மாற்றியமைக்க வேண்டுமென நான் தீர்மானித்தேன். கொவிட் – பொருளாதார நெருக்கடி காலங்களில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக சொத்துக்களையும் இழந்தனர். சொத்துப் பெறுமதி வீழ்ச்சி கண்டது. நாம் இப்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும்போது அதன் நன்மைகளை சாதாரண மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க எம்மால் முடிந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

சாதாரண மக்கள், பொருளாதார நெருக்கடியால், காணிகள், சொத்துகள், செல்வங்களை இழந்தனர். அதனால் காணி அனுமதி பத்திரம் கொண்டவர்களுக்கு காணி உறுதிகளை வழங்க தீர்மானித்தேன். இந்த வேலைத்திட்டத்திற்கு முன்பாக கொவிட் – பொருளாதார நெருக்கடி காரணமாக இழக்கப்பட்டட சொத்துப் பெறுமதி உறுமய திட்டத்தினால் மீண்டும் வலுவடையும்.

ஆசியாவில் எந்தவொரு நாடும் காணி உறுதிகளை மக்களுக்கு வழங்கவில்லை. அதனால் நாம் பெரும் புரட்சி செய்திருக்கிறோம். மேல் மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வசிக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீட்டு உரிமைகளை வழங்கியுள்ளோம். சாதாரண மக்கள் பட்ட கஷ்டங்களுக்கு நியாயம் செய்திருக்கிறோம். காணி உறுதிகளின் பெறுமதிகளை வடக்கு மக்களே அதிகமாக அறிவர். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் புலிகளால் அபகரிக்கப்பட்டன. இராணுவம் முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டன.

தற்போது மக்களுக்கு காணிகளுக்கான நிரந்த உரிமை கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ கூடிய சூழல் உருவாகும். உங்களுக்கு கிடைத்த காணிகளை விற்றுவிடாமல். அபிவிருத்தி செய்து இதிலிருந்து நல்ல பயன்களைப் பெறுமாறு கூறி வாழ்த்துகிறேன்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,

“மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்படும் காணி உறுதி பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வருகை தந்திருக்கும் ஜனாதிபதிக்கு நன்றி. நிரந்த காணி உறுதிகள் என்பது மக்களுக்கு கனவாகவே இருந்து வந்தது. அதனால் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அதற்கான தீர்வுகளை வழங்க ஆளணியை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

ஜனாதிபதி அனைத்து திட்டங்களையும் தூரநோக்குடன் செய்கிறார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கூடியவராகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே உள்ளார். வனக் காணிகளாக வர்தமானியில் அறிவிக்கப்பட்ட காணிகளும் மீட்டெடுக்கப்பட்டு, ஜனாதிபதியால் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

ஜனாதிபதி அரசியல் நோக்கங்களை விட்டுவிட்டு நாட்டு மக்களின் நலனுக்கான செயற்படுகிறார். எனவே ஜனாதிபதிக்கு உரிய விதத்தில் நன்றி கடனை செலுத்த வேண்டியது அவசியமாகும். மீண்டும் அவருக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்,

”நாடு இருள் யுகத்திற்கு சென்றுக்கொண்டிருந்தது. அவ்வாறான நாட்டை மீட்டு தமிழ் மக்களின் காணி மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்வு தரக்கூடிய ஜனாதிபதி ஒருவர் கிடைத்திருக்கிறார்.

இவ்வாறு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன்வந்திருக்கும் ஜனாதிபதிக்கு மன்னார் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். ஜனாதிபதியின் திட்டங்களை செயற்படுத்த அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது அவசியம்.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கையகப்படுத்தல் தொடர்பில் எவரும் தலையிடாத பிரச்சினைகளில் தலையிட்டு ஜனாதிபதி முழுமையான தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

“மன்னார் மாவட்ட வைத்தியசாலை மிக மோசமாக உள்ளது. எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கிறது. அதேபோல் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையினையும் அபிவிருத்தி செய்வதற்கான வசதிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் மன்னார் மாவட்டத்தில் பல காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. இங்கு வந்திருக்கின்ற ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதோடு, இப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மன்னார் மாவட்டத்திற்கு ஒரு கலாச்சார மண்டபத்தை அமைத்துத் தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்,

“கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்தில் போதிய அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை என மக்கள் அரசியல் பிரதிநிதிகளை சாடினர். A9 வீதியை அண்மித்திருக்கும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மன்னார் – முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு போதிய அபிவிருத்தி கிட்டவில்லை. அது குறித்து ஆராய்வதற்காக இங்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு நன்றி.

அதேபோல் வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய தொடர்ச்சியாக ஜனாதிபதி இங்கு வருகின்றமை வடக்கு மக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் வலுவாக அமைந்திருக்கிறது.

மக்களுக்கு சேவையாற்றுவதே அரச ஊழியர்களின் நோக்கமாகும். அதற்கு அணுகுமுறை அடிப்படையிலான மாற்றம் தேவைப்படுகிறது. அபிவிருத்தியின் பலன்களை இப்பகுதி மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார், வவவுனியா மாவட்டத்தில் வருகை தந்த மக்கள், மன்னார் மாவட்ட அரசாங்க பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.