மகளின் காதல் குறித்து நடிகர் அர்ஜுன் ஓபன் டாக்!

நடிகர் அர்ஜுன் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்து சென்றுள்ள தம்பி ராமையாவின் குடும்பம் மிகவும் பண்பாடு உள்ள குடும்பம் என தெரிவித்துள்ளார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அர்ஜூன் தம்பி ராமையா உமாபதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் செய்தியாளர்கள் முன்னிலையில் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் பேசிய நடிகர் தம்பி ராமையா தங்கள் குடும்பத்திற்கு மருமகளாக ஐஸ்வர்யா வந்தாலும், அவர் எங்களுக்கு மகள்தான் என கூறினார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மருமகளிடம், தாயாக இருந்து இந்த குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்று தான் வேண்டுகோள் வைத்திருப்பதாகவும் கூறினார்.

அதேசமயம் தன்னுடைய மகள் திருமணத்திற்கான மருமகனை தேர்வு செய்யும் பணியையும் தன் மகனிடம் கொடுத்தேன்.  அதேபோல் அவனுடைய வாழ்க்கையும் அவனே தேர்வு செய்து கொண்டான் எனவும் தம்பி ராமையா தெரிவித்தார்.

அர்ஜுன் பேசுகையில் நடிகர் தம்பி ராமையாவின் குடும்பம் மிகவும் பண்பாடு உள்ள குடும்பம். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தென்னாப்பிரிக்கா சென்று தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக பங்கேற்றார், மிகவும் திறமைசாலி, பண்பாளர், அமைதியானவர் மற்றும் நகைச்சுவை தன்மை கொண்டவர்.

அப்போது உமாபதி தனக்கு மருமகனாக வருவார் என்று தெரியாது. பின்பு ஐஸ்வர்யா உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று இரண்டாவது மகள் என்னிடம் கூறினார். அப்போதே எனக்கு தெரியும். இது காதல் விஷயமாக இருக்கும் என்று! அதேபோல தான் காதலிப்பதாக கூறினார். அதற்கு நான் பையன் யாரென்று கேட்டேன்,  உமாபதி என்று கூறியதும் நான் சரி என்று தெரிவித்தேன்.

மேலும் உமாபதி ஒரு திறமைசாலி, விரைவில் நீங்கள் ஒரு ஆக்சன் கிங்கை பார்க்கலாம், நான் என்னுடைய மருமகன் என்று கூறவில்லை.  அவர் உண்மையிலேயே திறமைசாலி என கூறினார் அர்ஜுன்.  அதேபோல் மணமக்கள் பேசுகையில், அனைவருடைய வாழ்த்துகளும் அன்பும் தங்களுக்கு தேவை என கோரிக்கை வைத்தனர்.