மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் நாட்டின் பிரதமரும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவிற்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலக தளபாட கொள்வனவுகளுக்காக 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொண்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக, கட்டட நிர்மாணப் பணிகள் நடைபெற்று நிறைவு பெறும் நிலையில் உள்ள, குறித்த புதிய மாவட்ட செயலக புதிய கட்டடத் தொகுதியில் பாதியளவு நிர்வாக நடவடிக்கைகள் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சரின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் மேற்படி கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய மாவட்ட செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முழுமையாக இயங்கச் செய்து விரைவில் மக்கள் பணிகளை ஆரம்பிக்கும் வண்ணம் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலகத்தில் இதுவரை முடிவுறுத்தப்பட்டுள்ள பணிகள் தொடர்பாகவும், அவற்றினை மக்கள் பாவனைக்காக விரைவாக வழங்குவதற்கு தேவையான ஏனைய அடிப்படை வசதிகள் தொடர்பாகவும், இராஜாங்க அமைச்சரினால் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

மாவட்ட செயலக கட்டடமானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ள போதிலும் அலுவலக தளவாட கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடானது மேற்கொள்ளப்படாமையின் காரணமாக குறித்த நேரத்தில் மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகள் முன்னெடுப்பதில் தொடர் தாமதநிலை ஏற்பட்டு வந்தது.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்,

அலுவலக தளபாட பற்றாக்குறை தொடர்பான விடயம் பிரதான விடயமாக இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஒல்லாந்தர் கோட்டையில் இயங்கிவந்த மாவட்ட செயலகத்தின் இடவசதி பற்றாக்குறையின் காரணமாக புதிய மாவட்ட செயலக் கட்டடத்திற்கான ஆரம்ப வேலைகள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்மடு பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் நிர்மாண பணிகள் மிக நீண்ட காலமாக முடிவுறுத்தப்படாமலிருந்தமையால், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் பொறுப்பேற்றதன் பின்னர், பல்வேறு வழிகளிலும் இதற்கான நிதியினை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக, புதிய மாவட்ட செயலகத்தின் பணிகளை முழுமையாக முடிவுறுத்தி இந்த ஆண்டு மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கான சாத்தியப்பாடு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.