இலவச குடிநீர் இணைப்புக்கு ஜூன் 21வரை கால அவகாசம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராமங்களில் இதுவரையில்  இலவசமாக  குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச் சபையின் முல்லைத்தீவு காரியாலயம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களில்  இதுவரையில்  தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்ட இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளாதவர்கள்   எதிர்வரும்  21ஆம் திகதிக்கு  முன்னர் தமது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இலவச குடிநீர் இணைப்பை பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறும் பதிவுகளுக்காக வருகை தரும் போது தேசிய அடையாள அட்டை, குடும்ப பதிவு அட்டை மற்றும் காணி தொடர்பான ஆவணங்களுடன் தங்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச் சபையின் முல்லைத்தீவு காரியாலயம் தெரிவித்துள்ளது.

மேற்படி பிரதேசங்களில் ஏற்கனவே பதிவுகளை மேற்கொண்டு இதுவரையில் குடிநீர் இணைப்பை பெற்றுக் கொள்ளாதவர்களும் தமது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களின் பதிவுகளை மீள உறுதி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

21ஆம்  திகதிக்கு பின்னரான பதிவுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு எதிர்வரும் காலங்களில் வழங்கப்பட மாட்டாது எனவும்  தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச் சபையின் முல்லைத்தீவு காரியாலயம் தெரிவித்துள்ளது.