யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 06.06.2024 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலககேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தை கவனத்தில் கொண்டு இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2024 ஜனவரி முதல் இன்றுவரை 4729 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாகவும், முன்னைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ் அரையாண்டில் டெங்குநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மக்களிடத்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாது

வலயக்கல்வி பணிப்பாளர்கள் ,பாடசாலை அதிபர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை வளப்படுத்த வேண்டுமெனவும் ,அனைத்து துறைசார் அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் டெங்குநோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிடார்.மேலும் எதிர்வரும் யூலை மாதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக்களை ஸ்திரப்படுத்தி அதன் மூலம் கிராமிய மட்டத்தில் விழிப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுபிரதேச செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.அந்த ஒருமாத காலப்பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர்கள் பிரிவிலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள் நிகழ்த்துவதின் மூலமாக மக்களிடத்தே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

கிணறுகளில் காணப்படுகின்ற குடம்பிகளை கட்டுப்படுத்த குடம்பிகளை உண்ணும் மீன்களை கிணற்றினுள் விடுதல், வீட்டுகழிவுகள் வீதிகளில் கொட்டப்படுவதைகட்டுப்படுத்தல்,கழிவுகளை தரம் பிரித்து கழிவு தொட்டிகளில் போடுவதை ஊக்குவித்தல் மற்றும் பாடசாலைமாணவர்கள் மட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,பிளாஸ்டிக் கழிவுகளை (போத்தல்) பொது இடங்களில் சேகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்றவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடக்குமாகாண சுகாதாரஅமைச்சின் செயலாளர் திரு. அருள்ராஜ், மாகாண சுகாதாரசேவை பணிப்பாளர் திரு பத்திரண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.ஆ.கேதீஸ்வரன்,மேலதிகஅரசாங்கஅதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன்,யாழ்ப்பாண மாவட்ட பிரதேசசெயலாளர்கள்,சுகாதாரவைத்தியஅதிகாரிகள்,சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ,பிரதேச சபை செயலாளர்கள்,தொற்றுநோயியல் பிரிவுவைத்தியஅதிகாரி,சமூகமட்டஅமைப்புக்களின் பிரதிநிதிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.