இந்திய வெளிவிவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்..!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(04) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

தற்போது நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார். ஒரு நாடாக நிலவும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இந்தியா இதுவரை வழங்கிய மகத்தான ஒத்துழைப்புகளுக்கு இந்திய அரசுக்கு எங்களது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்தும் எமது நாட்டிற்கு தங்கள் ஆதரவுகளையும் உதவிகளையும் பெற்றுத் தருமாறு கௌரமாக கேட்டுக்கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார்.

மேலும், நெருங்கிய அண்டை நாடாகவும் நீண்ட கால நண்பர் என்ற வகையிலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த உறவு தொடரும் என எதிர்பார்க்கிறேன். இதற்கு தன்னாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்குவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.