எப்பொழுதும் நாட்டை முதன்மைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும்..!

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு ஒரு கட்சி வெற்றி பெற்று தற்போது பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவதாக இடத்துக்கு வந்த ஒரு சக்தியாக எப்பொழுதும் பின்பற்றப்படும் வேலைத்திட்டம்தான் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுவதாகும். 220 இலட்சம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு நாம் பலமாக இருக்க வேண்டும். கபட, பொறாமை, வெறுப்பு அரசியல் முறைமையில் இருந்து விலகி நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு பக்க பலத்தை வழங்கி, நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களை புதிய தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும். பயன்படுத்தப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு பதில்களும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இலட்சக்கணக்கானோர் இங்கு வேலை வாய்ப்புகள் இல்லாது இருக்கும் போது, அதிக முதலீடுகளை இங்கு மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முதலீட்டாளர்களை, சர்வதேச சமூகத்தினரை கேட்டுக் கொள்கிறோம். அன்னிய நேரடி முதலீடு நாட்டிற்கு வருவதை விரும்புகிறோம். நாட்டில் தகவல் தொழிநுட்ப பூங்காக்களை உருவாக்கி தகவல் தொழிநுட்ப ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். உலகிற்கு ஏற்ற கல்வியும் ஸ்மார்ட் கல்வியும் மிக்க குடிமக்களும் உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு பொதுத் தேர்தல் வரும்போது பொதுத் தேர்தலின் ஊடாக நாட்டு மக்களின் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தீர்க்கப்பட வேண்டும். அது வெறுமனே பேச்சுக்கு மட்டுப்படுத்தப்படாமல் களத்தில் யதார்த்தமான ஒன்றாக அமைந்து காணப்பட வேண்டும். நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய உகந்த தீர்வுகள் மக்கள் சார்பான தீர்வுகளாக அமைய வேண்டும். மேலும், உள்ளோர் இல்லாதோர் இடைவெளியைப் போக்கக்கூடிய, சொந்தக் காலில் நிற்கக்கூடிய பெருமைக்குரிய தலைமுறையை உருவாக்கி, அனைத்து மக்களையும் உள்வாங்கிய அபிவிருத்தி யுகத்தை உருவாக்கித் தருவோம். இது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.