மிண்டும் அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம்!

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

தோற்றுப்போவோம் என்ற அச்சமும் காழ்ப்புணர்ச்சியுமே மீண்டும் எம்மீதான அவதூறுகளை இதர தமிழ் அரசியல் தரப்பினர் கையிலெடுத்து சேறுபூச முற்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பொதுச்சபை உறுப்பினர்கள், வட்டாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (02.10.2024) கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது வழிநடத்தலும் அதனை முன்னெடுத்துச் செல்லும் பொறிமுறையுமே சரியானது என கடந்த காலங்களில் மக்கள் எமது பாதையை நோக்கி அணிதிரளத் தொடங்கியதை கண்டு அச்சமுற்ற தரப்பினர் அரசியல் ரீதியில் நேருக்குநேர் நின்று வெற்றிகொள்ள முடியாததன் காரணத்தால் எம்மை தோற்கடிப்பதற்காக பல்வேறு அவதூறுகளையும் சேறுபூசல்களையும் வாரி இறைத்தனர்.

அத்தகையவர்களது குறித்த செயற்பாடுகளால் தோற்கடிக்கப்பட்டது எமது மக்களும் மக்களது அபிலாசைகளுமே தவிர நாமல்ல. என்றும் தனித்துவத்துடன் தடம்மாறாத கொள்கையுடன் எமது செயற்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்கின்றோம். அதனால்தான் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் என்னை தமது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றனர்.

இதேநேரம் தமிழ் மக்களிடம் நீண்டகாலமாக எமக்கு அதிகளவான நாடாளுமன்ற அரசியல் அதிகாரங்களை தருமாறும் அவ்வாறு கிடைக்கப்பெற்றால் நிச்சயமாக தமிழ் மக்களின் அபிலாசைகள் அனைத்தும் ஈடேறும் என்றும் கூறிவருகின்றேன்.

ஆனாலும் இதுவரை அந்த அரசியல் பலத்தை தமி்ழ் மக்கள் எம்மை நோக்கி தரவில்லை என்பது கவலையான விடயம்.

தற்போது மாற்றம் வேண்டும் என நீண்டகாலமாக முயற்சித்துவந்த இலங்கை மக்கள் மத்தியில் தற்போது அரசியல் அதிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோன்று தமிழர் தேசப்பரப்பில் இற்றைநாள்வரை புரையோடிப்போயுள்ள போலித் தேசியத்துக்கும் சுயநல அரசியல் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து மாற்றத்தை கொண்டுவர மக்களிடம் விளிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.