கனேடிய உயர்ஸ்தானிகர் ,ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்க தனதும் கனேடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் மனப்பூர்வமான வாழ்த்துத் தெரிவித்த கனேடியத் தூதுவர், ஊழலை ஒழித்து நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

ஊழல் மற்றும் பாதுகாப்பின்மையும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய எரிக் வோல்ஷ், உத்தேச சீர்திருத்தங்களின் மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான மிகவும் பொருத்தமான சூழல் இலங்கையில் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கை தொடர்புபட்டிருப்பது மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் கனேடிய அரசாங்கத்தின் முழு ஆதரவையும் வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.