“ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… 2 நாட்களில் வீடு திரும்புவார்…” Apollo மருத்துவமனை அறிவிப்பு!

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படம் வருகிற 10ஆம் திகதி வெளியாகிறது. 

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைக்கு பிறகு சில தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

பின்பு தமிழக சுகாதாரத்துறை, ரஜினி உடல்நிலை குறித்து அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து ரஜினி பூரண குணமடைய வேண்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருவதாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்போலோ வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்த அறிகையில் “ரஜினிகாந்த் 30 செப்டம்பர் 2024 அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திற்கு  செல்லும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இருதயநோய் நிபுணர் டாக்டர். சாய் சதீஷ் பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக நீக்கினார். அதனால் அறுவை சிகிச்சை இல்லாமல் அதை சரி செய்துவிட்டோம். திட்டமிட்டபடி சிகிச்சை நிறைவு பெற்றது. இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பவுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.