FMETU வின் ஊடக அபிவிருத்தி ஆய்வு அறிக்கை பத்திரிகை நிறுவனங்களிடம் கையளிப்பு..!

தேசிய ஊடக அபிவிருத்திக் கொள்கைக்கான பரிந்துரைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெடுக்கப்பட்ட ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தினுடைய ஆய்வு அறிக்கை வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.முருகேசு செந்தில்நாதனிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இந்த அறிக்கையின் பிரதிகள் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.எஸ்.ஸ்ரீகஜன் மற்றும் தினக்குரல் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் திரு. ஆர்.பி.ஹரன் ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டது.

இவ்வாய்வறிக்கை ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தினுடைய தலைவி கிருஷ்ணி கந்தசாமி இஃபாம் மற்றும் உப தலைவி கௌரி ஸ்ரீபிருந்தன் ஆகியோரால் செப்டம்பர் 13ஆம் திகதி நேற்று கையளிக்கப்பட்டது.

சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வழிகாட்டலின் கீழ், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த இந்த ஆய்வில், ஊடக சமூகத்தின் 250 பிரதிநிதிகளின் பரிந்துரைகள் உள்ளடங்கியுள்ளன. ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஊடகத்துறையில் ஆர்வமுள்ள புத்திஜீவிகள் ஆகியோர் பங்களித்திருந்தமை விசேட அம்சமாகும்.

தேசிய ஊடக மேம்பாட்டுக் கொள்கை மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை நிறுவும் நோக்கத்துடன், ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும் அதன் தலைவர்களும், சிவில் சமூகமும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்த ஆய்வு அறிக்கை இடம்பெற்றுள்ளது.

பொதுச் செயலாளர் திரு.தர்மசிறி லங்காபேலி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த ஆய்வு அறிக்கை செயல்படுத்தப்பட்டது. ஊடகத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் போன்றவை உள்ளடக்கப்பட்ட இந்த அறிக்கை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் கையளிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.