பொருளாதார சவாலை எதிர்கொண்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேன்

  • அதற்காக கிடைத்த அனைத்து கௌரவங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம்
  • மக்களுக்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை நான் எதிர்கொண்டேன்
  • மக்கள் வரிசைகளில் தவிக்கும் போதுகூட கண்டு கொள்ளாத சஜித்திடமும் அனுரவிடமும் எதிர்காலத்தை ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை.
  • கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்த குழுவினருக்கு நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் சக்தி உள்ளது.
  • நாரம்மலவில் ஜனாதிபதி தெரிவிப்பு

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த கௌரவங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் துன்பப்படும் போது தன்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் மக்களுக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

நாரம்மல பிரதேசத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டு மக்கள் வரிசைகளில் தவிக்கும் போது அதனை கண்டுகொள்ளாத சஜித் மற்றும் அநுரவிடம் தமது எதிர்காலத்தை நம்பி ஒப்படைக்க இந்த நாட்டு மக்கள் தயாரில்லை. கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்த மக்களுக்கு நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான பலம் உள்ளது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான வேலைத்திட்டம் ‘இயலும் ஸ்ரீலங்கா’ செயல்திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”நான் அணிந்துள்ள தொப்பி தொடர்பில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். கிளிநொச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு இறங்கி வரும் பெண் ஒருவர் இந்தத் தொப்பியை எனக்கு வழங்கினார். நான் உணவு, உரம், எரிபொருள் வழங்கி, மக்கள் வாழ வழிசெய்தமைக்கு அவர் எனக்கு நன்றி தெரிவித்து கௌரவப்படுத்தி இந்தத் தொப்பியை தந்தார். நன்றிக் கடன் செலுத்துவதற்காக எனக்கு வாக்களிப்பதாக அவர் சொன்னார்.

மக்கள் கஷ்டப்படும் போது அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. மற்றவர்கள் பொறுப்பேற்காத நிலையில் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பொறுப்பை ஏற்றேன். ஆனால் மக்கள் பட்டினியில் இருக்கையில் தேர்தல் நடத்துமாறு எதிரணியினர் கோரினர். கேஸ், பெற்றோல் இன்றி மக்கள் கஷ்டப்படும்போது, உள்ளுராட்சி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் நடத்தினால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? மக்கள் கஷ்டப்படும்போது, நாம் இணைந்து செயற்படுவது தவறா? ஆனால் அவர்களின் கட்சியை உடைப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் யாரைப் பாதுகாத்தோம். ராஜபக்‌ஷவினரை நாம் பாதுகாக்கவில்லை. மக்களைத்தான் பாதுகாத்தோம்.

ஐஎம்எப் நிபந்தனைகளை விதித்த நிலையில் வரியை அதிகரிக்க நேரிட்டது. மக்கள் என்னை திட்டித்தீர்த்தனர். ரூபாவின் பெறுமதி அதிகரித்தது. சில பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. மக்களுக்கு நாம் ஓரளவு நிவாரணம் வழங்கியுள்ளோம். மேலும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும் என மக்கள் என்னிடம் கோருகிறார்கள். சிலர் தாம் ஆட்சிக்கு வந்ததும் வரியைக் குறைப்பதாக கூறுகின்றனர். கோட்டாபய வரியைக் குறைத்ததால் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அடுத்த 5 வருடத்தில் அனைவரையும் இணைத்து நாட்டைக் கட்டியெழுப்ப எம்மால் ‘இயலும்’. ரூபாவைப் பலப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்க இருக்கிறோம்.

குருணாகலில் பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். பிங்கிரியவில் 1000 ஏக்கரில் முதலீட்டு வலயம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். குளியாபிடியவில் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட உள்ளது. கல்வியை மேம்படுத்த டிஜிட்டல் மத்திய நிலையம் ஏற்படுத்த வேண்டும். கிராமத்தைப் பலப்படுத்த வேண்டும்.

2022 இல் சஜித்தும் அநுரவும் எங்கிருந்தனர். எங்கு மறைந்திருந்தனர். தற்போது உங்கள் எதிர்காலத்தை ஒப்படைக்குமாறு கோருகின்றனர். ஒப்படைக்கப் போகிறீர்களா? நாம் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம். செப்டம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள்” என்றார்.