வட கிழக்கு மாகாணங்களுக்கும் நாட்டுக்கும் அபிவிருத்தியை தளிர் விட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவோம்.

வடக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் இடம்பெற்ற நாடுகளில் யுத்தத்தின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாடு கூட்டப்படுகின்றது. என்றாலும் எமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்த போதும், எந்த ஒரு தலைவரும் அவ்வாறான நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மாநாட்டின் ஊடாக கிடைக்கின்ற உதவிகளை வடகிழக்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்வதற்கு பயன்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடாத்துவதோடு, அதன் ஊடாக வடகிழக்கு மாகாணங்கள் மாத்திரமல்லாமல் முழு நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் தேர்தல் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று முன்தினம் பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோன்று ஒரே நாட்டிற்குள் உச்சபட்ச அதிகாரத்தை பகிர்ந்து, அரசியல் ரீதியாக வளப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை அரசாங்கம் பறித்திருக்கின்றது. அது இடம்பெறக் கூடாது. மத்திய அரசாங்கத்தினாலும், மாகாண சபைகளின் ஊடாகவும், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகவும் இடம்பெற வேண்டிய அபிவிருத்திகளை முன்னெடுக்க தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றின் அதிகாரங்களை பறிக்கக் கூடாது. வட மாகாண சபை இல்லாமல் இருக்கின்றது. அதனால் வடகிழக்கு பிரதேசங்கள் உட்பட நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களுக்கும் குறுகிய காலத்துக்குள் மாகாண சபை தேர்தலை நடத்தி அதன் ஊடாக அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்று தருவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு பல சலுகைகள்.

50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை 5000 ரூபாய்க்கு வழங்குவதோடு எரிபொருள் நிவாரணத்தையும் வழங்குவோம். அத்தோடு மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக 24 மாதங்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா வீதம் வழங்குவோம். தொடர்ந்தும் மக்கள் வறுமையில் இருப்பதற்கு விருப்பமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீடில்லாதவர்களுக்கு வீடு.

இடை நடுவில் நிறுத்தப்பட்டிருக்கின்ற வீடமைப்பு திட்டத்தை மீள ஆரம்பிப்பதோடு, காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதோடு, வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். வைத்தியசாலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதோடு, அரசாங்கத்தின் கொள்கைகளை இந்த மண்ணின் நிதர்சனமாக்குகின்ற, அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை மேற்கொண்டு, வாழ்க்கைச் செலவை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து கொடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நுண்கடன் வலையில் சிக்கி இருக்கின்ற மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதோடு, மீண்டும் எமது நாட்டை பலமான நாடாக கட்டியெழுப்புவோம். எனவே அனைவரும் இந்த பணிக்காக ஒன்றாக இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் தேசியத்துவத்தை உச்சம் பெற செய்து, ஒரு தாய் மக்களாய் எமது நாட்டை பலமான அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுகின்ற, வரலாற்று ரீதியாக அபிவிருத்திக்கான யுகத்தை உருவாக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது குறிப்பிட்டார்.