சென்னை – பலாலி இண்டிகோ விமான சேவை ஆரம்பம்!

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது யாழ். பலாலிக்கு தினசரி விமான சேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏயார் விமானம் (Alliance Air) நடத்துகிறது. இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் நேற்று பிற்பகல் 3.07 மணியளவில் பலாலியை வந்தடைந்தது. இதன்போது இனியம் இசைக்க விருந்தினர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றல், வரவேற்பு நடனம், நினைவுப் பரிசில்கள் வழங்கல், கேக் வெட்டுதல் மற்றும் விருந்தினர்களின் உரை என்பன இடம்பெற்றன.

பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.

பலாலியில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.