ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு..!

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு இலங்கையை வந்தடைந்துள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஆகஸ்ட் 30 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

ஸ்பெயின் நாட்டின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோர் தலைமையில் 10 தேர்தல் நிபுணர்களை கொண்ட பிரதான தூதுக்குழு ஏற்கனவே ஆகஸ்ட் 14 ஆம் திகதி அன்று கொழும்பை வந்தடைந்துள்ளது . தேர்தல் செயன்முறைகளை கண்காணிப்பதற்காக ஆகஸ்ட் 29 ஆம் திகதி முதல் 26 நீண்டகால கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். அதனையடுத்து தேர்தல் தினத்தன்று 32 குறுங்கால கண்காணிப்பாளர்கள் வாக்களித்தல், வாக்குகளை எண்ணுதல் மற்றும் முடிவுகளை அட்டவணைப்படுத்தல் ஆகியவற்றை கண்காணிப்பார்கள்.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்புக்குழுவினர் தேர்தல் செயன்முறைகள் நிறைவடையும் வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் .