மன்னாரில் டெங்கு அபாயம்…!

மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று வருகின்ற மையினால் கடந்த காலங்களை விட இம்முறை மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்த நிலையில் காணப்படுவதால் மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கும் நோக்குடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவசர கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் திணைக்கள தலைவர்களை ஒன்றிணைத்து மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுவினர்களான பிரதேசச் செயலாளர்கள் , சுகாதார வைத்திய அதிகாரிகள் , வைத்தியர்கள் , பொது சுகாதார பரிசோதர்கள் , பொலிஸார் , கடற்படை மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடலை நாம் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

மன்னார் நகரம் , நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில கிராமங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதன் போது பல்வேறு விடையங்கள் குறித்து ஆராயப்பட்டதுக்கு இணங்க .மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலுக்கு அமைவாக மக்களினால் வீடுகளில் வளர்க்க படுகின்ற அலங்கார பூ தாவரங்களில் நீர் காணப்படுவதனால் அவற்றில் அதிக அளவில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் காணப்படுகின்றமை அவதானிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு அமைவாக நீர் நிற்கக்கூடிய அலங்கார பூ தாவரங்களை நீக்கி ஏனைய மாற்றீடான அலங்கார தாவரங்களை வளர்ப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் நகரம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் டெங்கு நுளம்பின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனைகளை முன்னெடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதால் எதிர்வரும் வாரம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு சிரமதான பணிகளை முன்னெடுத்து நீர் தேங்கி நிற்கின்ற இடங்களைத் தவிர்த்து மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி கல்வியை தொடர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலயக்கல்வி பணிமனை ஊடாக உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிராம மட்டத்தில் இருக்கும் சுகாதார மேம்பாட்டுக் குழு ஊடாக கிராமங்களில் டெங்கு நுளம்பின் பரவல் காணப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு திணக்களங்களிலும் டெங்கு தொடர்பில் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஊடாக விடையங்கள் அலுவலகங்களில் டெங்கு நுளம்பின் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .என அவர் மேலும் தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)