நாட்டை ஆட்சி செய்த குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளனர்..!!

நாடு இன்று வறுமை நிலையிலிருந்தாலும், நாட்டை ஆட்சி செய்த குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடனை மீளச் செலுத்த முடியாத அளவுக்கு, வறுமையான நாடாக இலங்கை மாறியுள்ளது.

முற்றிலும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் உப்பு இறக்குமதி செய்யும் நிலையில் நாடுள்ளது. எனினும் மஹிந்த, சஷீந்திர, நாமல் மற்றும் ரணில் போன்றோர் செல்வந்தர்களாக உள்ளனர். ரணில் ஜனாதிபதியாகும் போது சாகல ஆலோசகராகிறார். அவரது சகோதரர் இலங்கை வங்கியின் தலைவராகிறார். எனவே ஒருவர் நாட்டை ஆட்சி செய்யும்போது அவரது குடும்பமே பொறுப்புகளை ஏற்கின்றன.

2023 ஆம் ஆண்டு முதல் சுகாதார சேவைக்கு வற்வரி விதிக்கப்படுகிறது. எமது அரசாங்கத்தில் வற் உள்ளிட்ட சகல வரிகளும் நீக்கப்படுமென, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.