சிந்துஜா மரணம் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்!

சிந்துஜா இளம் தாயின் மரணம் தொடர்பில் எதையும் , மூடி மறைக்கும் நோக்கிலோ . இழுத்தடிக்கும் நோக்கிலோ அல்லது பிழைகளுக்கு துணை போகும் நோக்கிலோ அல்ல. மாறாக நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சின் மூலமே தீர்மானிக்கப்படும் என்பதனால் இறந்த இளம் தாய்க்கு நீதி வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை கடிதம் மூலம் சுகாதார அமைச்சிற்கு அறிக்கை இட்டுள்ளோம் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு ஊடாக மன்னார் மாவட்ட மக்கள் . பொது அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில்

28.07.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த திருமதி எம்.சிந்துஜா என்ற இளம் தாயின் மரணம் வைத்தியர்களாகிய எங்களையும் வேதனைப்படுத்தியது மட்டுமின்றி உங்களைப் போன்று அதே அளவு மன அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்;டத்திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம். இதனால் நாம் பொதுவான கருத்துக்களை வெளியிட முடியவில்லை.

இருந்தும் நிறுவனத்தின் தலைவர் என்ற அடிப்படையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் இச்சம்பவம் தொடர்பாக ‘இவ்விடயத்திற்க்கு நாங்கள் பொறுப்பு கூற கடமைப்பட்டிருக்கின்றோம், பக்கச் சார்பற்ற விசாரணை நடைபெற்று உண்மைகள் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சம்பவம் நடந்த தினத்திலிருந்து நிறுவன ஊழியர்களாகிய நாம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தோம்.

28.07.2024 அன்று சிந்துஜாவுக்கு மரணம் ஏற்பட்டது.

29.07.2024 அன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை உள்ளடக்கிய வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையிலான மீளாய்வு நடைபெற்றது.

தாயின் மரணம் வைத்தியசாலையின் பணிப்பாளரால் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது.

30.07.2024 அன்று வைத்தியசாலை பணிப்பாளரால் ஆரம்பிக்கப்பட்ட புலன் விசாரனை குழு நியமிக்கப்பட்டது.

31.07.2024 அன்று பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரால் மரண விசாரனை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

01.08.2024 அன்று வைத்தியசாலை பணிப்பாளரால் மாகாண சுகாதார பணிமனையின் சுயாதீனமான விசாரணைக்காக விண்ணப்பிக்கப்பட்டது.

02.08.2024 அன்று பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரின் ஆரம்ப புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டது.

03.08.2024 அன்று மாகாண சுகாதாரப் பணிமனையின் விசாரனைக்குழு நியமிக்கப்பட்டது.

08.08.2024 அன்று சுகாதார அமைச்சின் விசாரணை மீளாய்வு நடைபெற்றது.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அது தொடர்பான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் பொது அமைப்புகளுக்கும் கலந்துரையாடல்கள் மூலம் அறியத்தரப் பட்டுக்கொண்டிருந்தன.

இவற்றிலிருந்து அன்பானதும் . பொறுப்புமிக்கதுமான மன்னார் மாவட்ட மக்களுக்கு நாம் தெரியப்படுத்துவது நிறுவன சட்டத் திட்டங்களுக்கு அமைந்து நாம் கருத்து வெளியிடாமல் இருந்ததென்பது எதையும் , மூடி மறைக்கும் நோக்கிலோ . இழுத்தடிக்கும் நோக்கிலோ அல்லது பிழைகளுக்கு துணை போகும் நோக்கிலோ அல்ல.

மேலும் இது தொடர்பான தற்போதைய நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சின் மூலமே தீர்மானிக்கப்படும் என்பதனால் இறந்த இளம் தாய்க்கு நீதி வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை கடிதம் மூலம் சுகாதார அமைச்சிற்கு அறிக்கை இட்டுள்ளோம்.

தற்சமயம் பல்வேறு காரணங்களால் மக்களுக்கும் வைத்திய சேவைக்குமிடைப்பட்ட இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது.

இது ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை அல்ல. ஆகவே வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளையோ முன்னேற்றங்கள் தொடர்பான கருத்துக்களையோ எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறியத்தருவது மக்களின் தார்மீக பொறுப்பாகும் என்பதையும் இவ்வறிக்கை மூலம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இது உங்கள் வைத்தியசாலை. நாங்கள் உங்கள் சேவையாளர்கள். இங்கு இடம்பெற்ற பிழை ஒன்றை வைத்து அனைவரையும் பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டுவது என்பது ஒட்டுமொத்த வைத்தியசாலையையும் மன அழுத்ததிற்கு உள்ளாக்கி கவலையடைய செய்கிறது.

எனினும் நாம் உங்களுடனே சேர்ந்து பயணிப்போம். இந்த விடயத்தில் மட்டுமன்றி எதிர் வரும் சந்தர்ப்பங்களிலும் உங்களுடன் இணைந்து வைத்தியசாலையை முன்னேற்றுவதை எமது மனப்பூர்வமான கடமையாக கருதுகின்றோம்.

எங்களது இந்த அறிக்கையானது பொது மக்களுக்கு தெளிவினை ஏற்படுத்தி மக்களுக்கும் வைத்தியசாலைக்கும் இடையிலான நம்பிக்கையை மீளக்கட்டி எழுப்பும் செயற்பாடுகளில் ஒன்றாகவே வெளியிடப்படுகிறது என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

(வாஸ் கூஞ்ஞ)