தேர்தல் நெருங்கும் போதே ரணிலுக்கு தொழிற்சங்கங்களின் ஞாபகம்- இளங்கோ காந்தி குற்றச்சாட்டு..!

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும்போது பல்வேறு தொழிற்சங்கங்களுடன் தமது பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாபகம் கொள்வார் என அகில இலங்கை முற்போக்கு தொழிலாளர் முன்னணியின் தலைவர் இளங்கோ காந்தி தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திரு.இளங்கோ காந்தி மேலும் கூறியதாவது.

தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

மத்திய மாகாணத்தில் அதிகளவான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர், தற்போது அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம், ஆனால் கடந்த காலங்களில் இவர்களுக்கு தொழில் வழங்குவதற்கு உரிய வேலைத்திட்டம் தயாரிக்க படவில்லை.

மத்திய மாகாணத்தில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது மேலும் பல நிறுவனங்களில் இந்த வேலையில்லா பட்டதாரிகளை நியமிக்கலாம், ஆனால் அது சரிவர செய்யப்படவில்லை என்பது எனக்கு தெரியும்.

இந்த வேலையற்ற பட்டதாரிகளின் குழு மனித உரிமை வழக்குகளை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது
தற்போது பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, இந்த நிலைமைகளினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் ஆனால் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த வேலை திட்டமும் அமுல் படுத்தப்படுவதில்லை,

தேர்தலுக்காக காத்திருப்பதே தற்போது இவர்கள் செய்து கொண்டிருக்கின்றது. பல்வேறு நபர்களை சந்தித்து பொய்யாக விவாதிக்கின்றனர்.

மஸ்கெலியா நிருபர்.