பிரேசிலில் விமான விபத்து: 61 பேர் பலி!

பிரேசிலின் சாவ் பாலோவில் நடந்த இந்த விமான விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர்.

பிரேசிலில் விபத்துக்குள்ளான விமானத்தை தவறவிட்ட இரண்டு பயணிகள் குறித்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.

விமானத்தில் ஏறுவதற்காக ஒருவர் காத்திருந்ததாகவும், அவருக்கு அழைப்பு வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

விமானத்தை தவறவிட்ட பயணிகளில் ஒருவரான ஜோஸ் பிலிப்பி கூறுகையில்.

“நீண்ட நேரம் காத்திருந்தும் அழைப்பு வரவில்லை.இதுபற்றி கேட்டபோது பயணிகள் ஏறுவது முடிந்து விட்டது என்று கூறினர். இதனால் நான் அவர்களிடம் வாக்குவாதம் செய்து ஒருவரை தள்ளிவிட்டேன். பின்னர் விபத்து குறித்து அறிந்தவுடன் எனது கால்கள் நடுங்க தொடங்கின. எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை,” என்று அவர் கூறினார்.

மேலும், விமானம் விபத்துக்குள்ளான நாளுக்கு முந்தைய நாள் விமானத்தின் நிலை சரிபார்க்கப்பட்டதாகவும், தொழில்நுட்பக் கோளாறு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளாகும் முன் அவசரநிலை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரேசிலில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவென கருதப்படுகிறது.