நாக சைதன்யா-சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்..!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் பிரபல நடிகருமான நாக சைதன்யா-சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.

சமந்தா மற்றும் நாக சைதன்யா பெற்றோர் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.

நடிகர் நாக சைதன்யா-சோபிதா துலிபாலா இருவரும் காதலித்து வருவதாகப் பல செய்திகள் வெளியானது.

நாக சைதன்யா-சோபிதா துலிபாலா இருவரின் நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது. இருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்த செய்தியை நாகார்ஜுனா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் X பதிவில் அவர் கூறியதாவது, ‘எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்பதை அறிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம்.

சோபிதா துலிபாலாவை எங்கள் குடும்பத்தில் ஒருவராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஜோடியின் வாழ்க்கையில், வாழ்நாள் முழுவதும் அளவற்ற காதலும் மகிழ்ச்சியும் பொங்க வாழ்த்துகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக. 8.8.8 முடிவில்லா காதலின் தொடக்கம்.” என்று பதிவிட்டுள்ளார்.