கோவையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி!

TNPL கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (ஆக. 4) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில், முதலில் களமிறங்கிய கோவை அணியின் ஆட்டக்காரர்கள் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடித்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு லைகா கோவை கிங்ஸ் 129 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ராம் அரவிந்த் 27 ரன்களும், ஆதீக் உர் ரஹ்மான் 25 ரன்களும், சுஜய் 22 ரன்களும் எடுத்தனர். திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விமல் குமார் 9 ரன்களிலும், ஷிவம் சிங் 4 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், பாபா இந்திரஜித் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். பாபா இந்திரஜித் 32 ரன்களிலும், அஸ்வின் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, 18.2 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.