இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டி சமநிலையில் முடிவு !

இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அக்ஷர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.