மன்னாரில் வரலாற்று நிகழ்வுகளை அறிந்துகொள்ள ‘அருங்காட்சியகம்’

மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் வரலாற்று ரீதியான பதிவுகள் அறியப்படாத நிலையில் மக்கள் மற்றும் மாணவர்கள் பயன் பெறும் இலகுவாக அறிந்து கொள்ளும் விதத்தில் பயணிக்கும் அருங்காட்சியகம் முன்னெடுக்கும் படி மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தியவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

வரலாற்று நிகழ்வுகளை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘எமது காலம்’  எனும் கருப்பொருளில் ‘பயணிக்கும் வரலாற்று’ அருங்காட்சியகம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள தோடு எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள  ஆவணப் படுத்தவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைக்கான செயல்திட்ட நடவடிக்கை கூட்டம் செவ்வாய்க்கிழமை (30) காலை 10 மணி அளவில் மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் பழைய மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ‘ஸ்கோப்| அமைப்பின் திட்ட ஆலோசகர் சுஜான் நாணயக்கார , தேசிய பணிப்பாளர் நவாஸ் முகமட் . குறித்த அமைப்பின் வரலாற்று கருத்தாடல் ஆலோசகர் தர்ஷிகா கதிர்வேல் . திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமட் சுஹைல் , திட்ட ஒருங்கிணைப்பாளர் தரிந்த மல்லவராச்சி , திட்ட முகாமையாளர் சௌமியா அமரசிங்க மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்கான ஏற்பாடு திட்டம் மற்றும் மன்னார் மாவட்டம் தொடர்பான வரலாறு  மற்றும்  மன்னார் மாவட்ட எல்லைகள் , மன்னார் மாவட்டத்தின் சிறப்பு , சமயம் , கலாச்சாரம் , பண்பாடுகள் , கலை , இன்னும் பல்வேறு வரலாற்று சிறப்புகள் தொடர்பான ஆய்வுகள் தரவுகள் மற்றும் பல்வேறு தரப்பினர்களையும் அறிந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்தாடல் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் வரலாற்று ரீதியான பதிவுகள் அறியப்படாத நிலையில் குறித்த நிகழ்வின் ஊடாக மக்கள் பயன் பெறும் விதத்தில் குறிப்பாக மாணவர்கள் இலகுவாக அறிந்து கொள்ளும் விதத்தில் பயணிக்கும் அருங்காட்சியகம் முன்னெடுக்கும் படி மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தியவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

குறிப்பாக வளவாளர்கள் தமிழில் தமது கருத்துக்களை ஆவணப்படுத்தல்களை முன் வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் பயணிக்கும் அருங்காட்சியகம் திட்டத்தினூடாக பல்வேறு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)