ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தெஹ்ரானில் படுகொலை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது. 90,589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியாஹ் ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.