இலங்கை ஒருநாள் அணிக்கு அசலங்க தலைவராக தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை ஒருநாள் குழாத்தில் சரித் அசலங்கவுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் நேற்று (30) முடிவுற்ற நிலையில் இரு அணிகளும் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அண்மையில் இலங்கை T20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட சரித் அசலங்கவுக்கு ஒருநாள் அணித் தலைமை பொறுப்பையும் வழங்க தேர்வுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர். இதில் சகலதுறை வீரர் சமிக்க கருணாரத்ன மற்றும் சதீர சமரவிக்ரமவும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒருநாள் தொடரின் கடைசி இரு போட்டிகளும் ஓகஸ்ட் 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதோடு அனைத்து ஆட்டங்களும் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

இலங்கை குழாம்: சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷங்க, வனிந்து ஹசரங்க, துனித் வெள்ளாலகே, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, அகில தனஞ்சய, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பதிரண, அசித்த பெர்னாண்டோ.