350 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

350 போதை மாத்திரைகளுடன் இருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

21,22 வயதுடைய மில்லபெத்த மற்றும் கமேவெல நான்காம் கட்டைப் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சந்தேகத்துக்கிடமான இருவரையும் சோதனைக்கு உட்படுத்திய போது ஒருவரிடம் இருந்து 100 போதை மாத்திரைகளும் மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 250 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் விஷேட அதிரடிப் படையினரால் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் போதை மாத்திரைகளையும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுளை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரட்னவின் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா