இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்

  • கடன் மறுசீரமைப்பு செயல்முறையை விரைவாக நிறைவு செய்யப்பட்டிருப்பதன் ஊடாக ஜனாதிபதியின் தலைமையின் மீதான சர்வதேச நம்பிக்கையை பிரதிபலிக்கிறது – ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ (Dr. IZUMI Hiroto).

கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ (Izumi Hiroto) தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கைகோர்த்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை எட்டியதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் மீது சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையே பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வருகை தந்துள்ள வீடமைப்பு, நிர்மாண மற்றும் நகர்ப்புறத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய உயர்மட்டக் குழு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.

இலங்கையில் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் ஜப்பானினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்பட்டு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டமை தொடர்பிலும் ஜப்பான் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு ஜப்பான், இலங்கைக்கு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, கல்வி, விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்காக தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய ஒத்துழைப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மீள ஆரம்பிப்பது முக்கியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு கப்பல்துறை இலங்கைக்கு பெறுமதிமிக்க நிறுவனமாக இருப்பதால் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறை அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் ஒளிபரப்புத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜப்பானிய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

கடந்த ஆட்சியில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட ஜப்பானிய பிரதிநிதிகள், நல்லதொரு திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவித்ததோடு, கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த திட்டமான இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு சாத்தியமாக உள்ள இடங்கள் குறித்து ஆராய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டுவசதி மற்றும் பிற நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் அரச -தனியார் கூட்டு முயற்சியின் ( PPP) முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இலங்கை அரசாங்கம் அதன் கொள்கைகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க சுற்றாடல் நட்பு திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இந்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

ஜப்பானில் மின்சார விநியோகத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானில் தனியார் துறையிலுள்ள தொழில் வாய்ப்புகளுக்காக தொழில்நுட்பத் துறையில் இலங்கை பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். மேலும், கார்பன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக மேம்பட்ட ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை உள்ளடக்கிய கூட்டு கார்பன் குறைப்பு பொறிமுறை (JCM) குறித்து ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிதேகி (MIZUKOSHI Hideaki), சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின் (JBIC) தலைவர் மெயெதா ததாசி (Maeda Tadashi) பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, கொழும்பு கப்பல்துறை முகாமைத்துவ பணிப்பாளர் திமிர எஸ். கொடகும்புர உட்பட ஜப்பானின் பல முன்னணி வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News