மகளிர் T20 ஆசிய கிண்ணத்தை இலவசமாக கண்டுகளிக்கலாம்

எதிர்வரும் 2024 மகளிர் T20 ஆசியக் கிண்ணத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாமென, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, பொதுமக்கள் மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்கும் விளையாட்டுப் போட்டிகளைக் காணவும் ரங்கிரி தம்புள்ளையில் மைதானத்தின் வாயில்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.

இத்தொடரானது எதிர்வரும் 2024 ஜூலை 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதோடு, முதல் போட்டி ஐக்கிய அரபு இராச்சியம் – நேபாளம் அணிகளுக்கிடையில் பிற்பகல் 2.00 மணிக்கு எதிர்கொள்ளவுள்ளது. அதே நாளில் இரவு 7.00 மணிக்கு பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.

இலங்கையின் முதல் போட்டி பங்காளதேஷுக்கு எதிராக ஜூலை 20ஆம் தகதி இரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மகளிர் T20 ஆசிய கிண்ணத்தில் விளையாட சர்வதேச மகளிர் அணிகள் இலங்கைக்கு வர ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம், தாய்லாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே இலங்கை வந்தடைந்துள்ளன.

பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்திய அணிகள் நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.